தமிழகத்தில் தருமபுரி, சேலம், வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை (மே 28) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 5.8 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் வளிமண்டல சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக, நாளை முதல் ஜூன் 2-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. 29-ம் தேதி வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் இதேபோன்ற வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை குறித்து பேசிய வானிலை மையம், நாளையோ, நாளை மறுதினமோ வட தமிழகத்தின் உள் பகுதிகளில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 105 டிகிரி ஃபாரன்ஹீட், குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் ஆக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் மே 31-ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் மற்றும் ஆதமங்கலத்தில் தலா 8 செமீ மழை பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்றம்பாளையத்தில் 7 செமீ, திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் கேஆர்பி அணையில் தலா 6 செமீ, திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது.