தர்மசாலா: ஐபிஎல் 2026 குவாலிஃபையர் 1 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணித் தலைவர் ஷுப்மன் கில் எடுத்த தந்திரோபாய தவறுகள் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். தரம்சாலாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆர்சிபி அணி 254/5 ரன்கள் குவித்து, 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பவர் பிளே முடிந்தவுடன், அதாவது ஏழாவது ஓவரிலேயே லெக் ஸ்பின்னர் ரஷீத் கானை பந்துவீச அழைத்திருக்க வேண்டும் என்று அஸ்வின் கூறினார். ரஷீத் தனது எட்டாவது ஓவரில் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தாலும், மீதமுள்ள இரண்டு ஓவரில் 24 ரன்கள் கொடுத்து விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. இது ஷுப்மன் கில் செய்த தவறு என அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். ரஷீத் கான் இந்த ஐபிஎல் 2026 சீசனில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இது சிறப்பான சீசன் அல்ல.
ஷுப்மன் கில் இந்த ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் என்றும், பேட்டிங்கில் அவர் கொண்டுவந்த மாற்றங்களுக்காக பாராட்டப்பட வேண்டும் என்றும் அஸ்வின் தெரிவித்தார். இருப்பினும், குஜராத் அணியில் சில பலவீனங்களும், குறைபாடுகளும் இருப்பதாகவும், அதை அவர்கள் சொந்த மண்ணின் சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்தி சரிசெய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். குவாலிஃபையர் 1-ல் கில் 7 பந்துகளில் வெறும் 2 ரன்கள் மட்டுமே சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் அணியின் பிளேயிங் லெவன் குறித்தும் அஸ்வின் விமர்சனம் செய்தார். முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டியில் குல்வந்த் கெஜ்ரோலியாவை அணியில் சேர்த்திருக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். சீசனின் தனது முதல் ஆட்டத்தில் களமிறங்கிய கெஜ்ரோலியா, இரண்டு ஓவரில் 31 ரன்கள் கொடுத்து விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. 15வது ஓவரில் கெஜ்ரோலியா 28 ரன்களை வாரி வழங்கிய பின்னர், போட்டியின் உத்வேகம் முழுமையாக ஆர்சிபிக்கு சாதகமாக மாறியது. நடுநிலையான மைதானத்தில் ஆர்சிபி, ஜிடியின் திறனை வெளிப்படுத்தியது. டாஸ் வெல்வது முக்கியம், அவர்கள் முதலில் பந்துவீசத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், குல்வந்த் கெஜ்ரோலியாவை ஏன் ஆட வைத்தார்கள் என்று புரியவில்லை என்றும் அஸ்வின் குறிப்பிட்டார்.
குஜராத் அணி இப்போது குவாலிஃபையர் 2 போட்டிக்காக முல்லன்பூருக்குச் செல்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் வெற்றியாளருடன் இந்தப் நாக்-அவுட் போட்டி மே 29, வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும். இதே போன்று சிஎஸ்கே எதிரான போட்டியை வென்று சுப்மன் கில், சிஎஸ்கே ரசிகர்களை வம்பிழுக்கும் செயலில் ஈடுபட்ட நிலையில், தற்போது, ஆர்சிபியிடம் தக்க பதிலடியை பெற்று, அவருடைய அகம்பாவம் குறைந்துவிட்டதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.