சென்னையில் திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதற்கான புதிய விதிமுறைகளை பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதன்படி, பெருமளவு கழிவுகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மாநகராட்சியின் இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு கடந்த 28.01.2026 அன்று வெளியிட்ட திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026 ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளது.
புதிய விதிகளின்படி, 20,000 சதுர மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட கட்டிடங்கள், தினசரி 40,000 லிட்டருக்கு மேல் நீர் பயன்படுத்தும் நிறுவனங்கள், அல்லது தினசரி 100 கிலோவுக்கு மேல் திடக்கழிவுகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் 'பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள்' என வகைப்படுத்தப்படுகின்றன. இந்த வரையறைக்குள் நிறுவன பயனாளர்கள், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு சங்கங்கள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், ஐ.டி. பூங்காக்கள், வணிக வளாகங்கள், சந்தைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பலவும் அடங்கும்.
இந்த பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள், மாநகராட்சியின் இணையதளத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 15 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாதவர்களுக்கு திடக்கழிவுகள் மேலாண்மை விதிகள், 2026ன் படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், குப்பைத் தொட்டிகளை கொள்முதல் செய்து, கழிவுகளை தரம் பிரித்து, மாநகராட்சி அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். உயிரியல் கழிவுகளை வளாகத்திலேயே உரமாக்கல் அல்லது உயிரி எரிவாயுவாக மாற்றும் முறைகளில் செயல்படுத்த வேண்டும்.
வருடாந்திர அறிக்கை சமர்ப்பிப்பது, உலர்கழிவு, சுகாதாரக் கழிவு, சிறப்பு பராமரிப்பு கழிவுகளை உரிய முறையில் அப்புறப்படுத்துவது போன்ற விதிமுறைகளையும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். பதிவு செய்வதற்கான தனிப்பட்ட இணைப்பு https://gccservices.in/bulkwaste/register என்ற இணையதளத்தில் உள்ளது. மண்டல அலுவலர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் பதிவேற்றத்திற்கு உதவுவார்கள். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான கழிவு மேலாண்மையை உறுதி செய்ய அனைத்து நிறுவனங்களும் இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்.