காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் உள்ள ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் என ஐந்து தனித்தனி தேர்களில் சுவாமிகள் எழுந்தருளி வீதியுலா வந்தனர்.
நேற்று செண்பக தியாகராஜ சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற நிலையில், இன்று அதிகாலையில் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு அலங்கரிக்கப்பட்ட தேர்களில் சுவாமிகள் எழுந்தருளினர். சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனைக்கு பிறகு தேரோட்டம் தொடங்கியது. தருமபுரம் ஆதீன கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், திருநள்ளாறு சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகர், மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி, கோவில் நிர்வாக அதிகாரி சுப்பிரமணி ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
ஒரே நேரத்தில் ஐந்து தேர்கள் வீதியுலா வந்ததைக் காண, தேரோடும் வீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். பக்தர்கள் 'ஓம் நமச்சிவாயா' என பக்தி முழக்கங்களை எழுப்பியபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர். சனி பகவான் தங்க காக்கை வாகனத்தில் வீதிஉலா நாளை (28ஆம் தேதி) இரவும், தெப்ப உற்சவம் 29ஆம் தேதியும் நடைபெறும்.
திருநள்ளாறு பிரம்மோற்சவ தேரோட்டத்தை முன்னிட்டு, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சாா்பு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.