தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தர் விவகாரத்தில், மாநில உயர்கல்வி அமைச்சர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த ஆட்சிக் காலத்தில், பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்குப் பதிலாக மாநில முதல்வரே இருக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், அப்போதைய ஆளுநர் அதை கிடப்பில் போட்டார். இதை எதிர்த்து அன்றைய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அந்த மசோதா சட்டமாகியது. இதன் மூலம் மாநில உரிமை நிலைநாட்டப்பட்டது.
இந்நிலையில், தற்போது பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர், இது குறித்த முந்தைய அரசின் நிலைப்பாட்டைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என்று கூறியுள்ளார். அவரது இந்தக் கருத்து, ஒன்றிய பாஜக அரசின் மாநில உரிமைப் பறிப்புக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. எனவே, அவர் தனது தவறான கருத்தியல் நிலைப்பாட்டைக் கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது' என்று தெரிவித்துள்ளார்.
