சென்னையில் பனையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் த.வெ.க. பொதுச்செயலர் ஆனந்த் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகி கமலக்கண்ணன் தலைமையில் சுமார் 100 நிர்வாகிகள் த.வெ.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர். மேலும், அதிமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மற்றும் அண்ணா தொழிற்சங்க டாஸ்மாக் பிரிவு நிர்வாகிகளும் த.வெ.க.வில் இணைந்தனர். த.வெ.க.வுக்கு இதுவரை தொழிற்சங்கம் இல்லாத நிலையில், கமலக்கண்ணன் இணைவின் மூலம் புதிய தொழிற்சங்கம் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இணைப்பு நிகழ்ச்சி குறித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ‘இன்னும் ஒரு மாத காலத்திற்குள் 90 சதவீத அதிமுக நிர்வாகிகள் த.வெ.க.வுக்கு வருவார்கள். அதிமுகவினரை நாங்கள் எந்தவிதமான சலுகையும் காட்டி அழைக்கவில்லை. த.வெ.க. மட்டுமே ஒரே நம்பிக்கையாக உள்ளது என அதிமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர். அதிமுகவில் இருந்து வரும் தலைவர்களை நாங்கள் ஒரு குடும்பத்தைப் போல வரவேற்கிறோம். எம்.ஜி.ஆர் வழியில் நடப்பது த.வெ.க. மட்டுமே. செங்கோட்டையன் அண்ணனுக்கு தலைவர் கொடுக்கும் மதிப்பைக் கண்டுதான் அவர்கள் இங்கு வருகிறார்கள். 90 சதவீத அதிமுக தொண்டர்கள் த.வெ.க.வில் சேர முடிவெடுத்துவிட்டார்கள்’ என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், ‘பா.ஜ.க.வுடன் சேர்ந்து சந்தித்த தோல்விகளை அதிமுக தொண்டர்கள் தாங்கிக்கொண்டனர். திமுக – அதிமுக சேர்ந்து செய்த சூழ்ச்சியால்தான் அதிமுகவினர் நம்பிக்கை இழந்தனர். ஜெயலலிதா இப்போது இல்லை என்பதை நினைத்து அவர்கள் த.வெ.க.வில் வந்து சேர்ந்துள்ளனர். புதுச்சேரியில் அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் இ.பி.எஸ். முதல்வராக ஆதரவு கேட்டு கையெழுத்து வாங்கியுள்ளார். 47 எம்.எல்.ஏ.க்களுடன் இ.பி.எஸ். எப்படி முதல்வராவது? பின்னர் தான் தெரிந்தது, உதயநிதியும் இ.பி.எஸ்.சும் சேர்ந்து உதயநிதி முதல்வராகவும், இ.பி.எஸ். துணை முதல்வராகவும் ஆக சூழ்ச்சி செய்தனர். அதை முதலில் எதிர்த்தது கம்யூனிஸ்ட் கட்சிகளும் வி.சி.க.வும்தான்’ என்று தெரிவித்தார்.
‘செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தபோது சிறிய கட்சி என விமர்சித்தனர். தமிழகத்தில் கட்சி நிதி முறை ஒழிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவு வெளியான அன்றே திமுக – அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது’ என்றும் அவர் கூறினார். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் த.வெ.க.வில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.