தமிழகத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியினரின் நலன்களைக் கண்காணிப்பதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அமைக்கப்பட்டிருந்த குழுவை தவெக அரசு மறுசீரமைத்துள்ளது. இந்த மறுசீரமைக்கப்பட்ட குழுவிற்கு தமிழக முதல்வர் விஜய் தலைமை தாங்குகிறார். இந்தக் குழுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது முழு ஆதரவை வழங்கி வருவதாகவும், தவெக அமைச்சரவையில் விசிகவிற்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அமைச்சர் பதவி என்பது கிடைக்காத ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. இந்த நீண்ட காலக் கனவை தற்போதைய முதல்வர் விஜய் தலைமையிலான அரசு நிறைவேற்றியுள்ளது.
இருப்பினும், திருமாவளவன், 'நாங்கள் தவெக கூட்டணியில் இல்லை, திமுகவுடன் எங்கள் நட்பு தொடர்கிறது' என்று கருத்து தெரிவித்து வருகிறார். இதற்கு காங்கிரஸ், மதிமுக போன்ற கட்சிகள் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. திமுகவும் திருமாவளவனுடன் தொடர்ந்து நட்புறவைப் பேணி வருகிறது.
இந்நிலையில், தமிழக முதல்வர் விஜய் தலைமையில் அமைக்கப்பட்ட பட்டியலின, பழங்குடியினருக்கான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவில் விசிக தலைவர் திருமாவளவன் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். இக்குழுவில் தமிழகத்தின் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த அனைத்து எம்பிக்களும், எம்.எல்.ஏக்களும் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
குறிப்பாக, தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின பிரிவைச் சேர்ந்த 8 எம்பிக்கள் மற்றும் 37 எம்.எல்.ஏக்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இதில் திருமாவளவன், சசிகாந்த் செந்தில், ஆ.ராசா உள்ளிட்டோர் அடங்குவர். மேலும், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் மற்றும் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆகியோர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த உயர்நிலை கண்காணிப்புக் குழுவானது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நிகழும் வன்கொடுமைச் சம்பவங்களைத் தடுப்பதற்கும், சட்ட அமலாக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கும் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளைக் கண்காணிக்கும் மாநில உயர்நிலை குழுவை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
