முதலமைச்சர் விஜய்யை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அறிக்கை வாயிலாகவும், மேடைகளிலும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் திருச்சி கிழக்கு தொகுதி நன்றி அறிவிப்பு கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசிய பேச்சுக்கு, உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில், சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட த.வெ.க அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் விமர்சனங்களுக்கு மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துப் பேசியுள்ளார்.
தவெகவின் வெற்றி என்பது தமிழ்நாடு பெண்கள் மற்றும் இளைஞர்களின் வெற்றி என்றும், அதை கொச்சைப்படுத்தினால் பெண்களை கொச்சைப்படுத்துவதாக அர்த்தம் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். முக ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் கவர்ச்சியால் இந்த வெற்றி வந்தது என்கின்றனர். முக ஸ்டாலின் அவர்கள் கவர்ச்சிக்காக தானே உதயநிதி ஸ்டாலினை சினிமாவில் நடிக்க வைத்தார். ஆனால் படிப்பும் வரவில்லை, சினிமாவும் வரவில்லை, கடைசியில் அரசியலும் வரவில்லை என அவர் குறிப்பிட்டார்.
தவெகவின் இந்த வெற்றி ஏன் வரலாறு வெற்றியாக இருக்கிறது தெரியுமா? திமுக என்ற கட்சி பல தோல்விகளை சந்தித்திருந்தாலும், அதன் தலைவர் கலைஞர் ஒருபோதும் தோற்றதில்லை. ஆனால் முக ஸ்டாலின் தோல்வியை சந்தித்துவிட்டார் என ஆதவ் அர்ஜுனா திமுகவிற்கு பதிலடி கொடுத்தார். மேலும், முக ஸ்டாலின் மட்டும் தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் விஜய்யின் பரப்புரைக்கு முறையாக அனுமதி கொடுத்திருந்தால் 59 தொகுதியில் திமுக டெபாசிட் இழந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.
உள்ளாட்சி தேர்தலில் ஒரு மேயர் இடத்தை ஜெயித்து காட்டுங்கள், திமுக படுதோல்வி அடையும். சென்னையில் திமுக ஒரு வார்டில் கூட டெபாசிட் வாங்காது என்றும் அவர் சவால் விடுத்தார். தவெகவின் மக்கள் பிரதிநிதிகளுக்கு திமுக மேயர்கள் ஒத்துழைப்பதில்லை என்றும், அடிப்படை பணிகளை கூட செய்யாமல் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர் என்றும் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டினார். 'எந்த அமைச்சரும் 1 ரூபாய் காசு வாங்கவில்லை.. தைரியம் இருந்தால் நிரூபித்து காட்டுங்கள்… ஆனால் உங்களால் இதை செய்ய முடியுமா? சட்டசபைக்கு வாருங்கள், நாங்கள் காத்திருக்கிறோம்.. நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று பார்க்கிறோம்…' என்றும் அவர் சவால் விடுத்தார்.