புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, பிறந்த 56 நாட்களே ஆன குழந்தையை தூங்க வைப்பதற்காக மின்விசிறி பிளக்கை மாட்டிய தந்தை, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரையபட்டி கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான லோகநாதன், சென்ட்ரிங் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 56 நாட்களுக்கு முன்புதான் இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், தனது குழந்தையை தூங்க வைப்பதற்காக வீட்டில் இருந்த மேசை மின்விசிறியின் பிளக்கை சாக்கெட்டில் சொருக முயன்றபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து லோகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த துயர சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்விசிறி போடச் சென்ற தந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களே ஆன குழந்தைக்கு மின்விசிறி போட முயன்றபோது ஏற்பட்ட இந்த விபத்து, பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற மின் விபத்துக்கள் நடக்காமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.