கோவையில் பாஜகவிற்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகியுள்ளனர். கோவை தெற்கு மாவட்ட பாஜகவின் முன்னாள் தலைவர் கே.வசந்தராஜன், தனது 28 ஆண்டு கால பாஜக உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கும் இந்த சூழலில், வசந்தராஜன் பாஜகவில் இருந்து விலகி, அண்ணாமலை உடன் இணைந்து பயணிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், '1998ல் கிளை தலைவராக பாஜகவில் எனது அரசியல் பயணத்தை தொடங்கி, மாநில இளைஞரணி பொதுச்செயலாளர், மாவட்ட தலைவர், பாராளுமன்ற வேட்பாளர் என பல நிலைகளில் என்னை உயர்த்திய பாரதிய ஜனதா கட்சிக்கு எனது மனமார்ந்த நன்றிகள். 28 ஆண்டுகளாக தாமரையுடன் வாழ்ந்திருக்கிறேன். வாஜ்பாய், அத்வானி, மோடி போன்ற தலைவர்களின் தலைமையில் பாஜகவில் பயணித்தது எனது பூர்வ ஜென்ம புண்ணியம். தமிழகத்தில் ஊழல், குடும்ப ஆட்சி, போதைக்கு அடிமை போன்ற பிரச்சனைகளில் இருந்து மீட்டு, தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே எனது சமூகப் பயணம். ஆனால், தற்போதைய தமிழக பாஜக சூழலில் அது நிறைவேறும் என்ற நம்பிக்கையை நான் முழுவதுமாக இழந்துவிட்டேன். கட்சிக்காக பாடுபட்ட இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், அனைவரையும் தலைவர்கள் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதே எனது ஆவல். கனத்த இதயத்துடன் பாஜகவில் இருந்து விலகுகிறேன். தமிழக நலன், தேசிய சிந்தனை, ஊழலற்ற நேர்மையான வளர்ச்சி ஆகியவற்றை எதிர்பார்க்கும் அரசியல் பாதையில் அண்ணாமலை அண்ணனுடன் இணைந்து பயணிக்க எனது அரசியல் நண்பர்களுடன் முடிவு செய்துள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட முன்னாள் பாஜக தலைவரான வேதசுப்பிரமணியமும் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தைச் சேர்ந்த இவர், 1998 முதல் 28 ஆண்டுகளாக பாஜகவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வந்துள்ளார். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருந்தபோது, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவராக செயல்பட்ட இவர், பின்னர் தாம்பரம் சட்டசபை தொகுதி அமைப்பாளர், மாநில செயற்குழு உறுப்பினர் போன்ற பொறுப்புகளையும் வகித்துள்ளார். இவரும் அண்ணாமலையுடன் இணைந்து பணியாற்றப்போவதாக அறிவித்துள்ளார்.
பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி, அண்ணாமலையுடன் இணைவது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.