'கருப்பு' திரைப்படம் வரும் ஜூன் 12-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதன் தெலுங்கு வடிவமான 'வீரபத்ருடூ' திரைப்படமும் இதே நாளில் ஓடிடியில் வெளியாகிறது.
கடந்த மே 15-ஆம் தேதி வெளியான 'கருப்பு' திரைப்படம் ரசிகர்களிடையே அபாரமான வரவேற்பைப் பெற்று, ரூ. 330 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இது சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக வசூல் செய்த படமாகப் புதிய சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் மட்டுமே ரூ. 175 கோடிக்கும் மேல் வசூலித்ததோடு, ஒரு கோடிக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையான சூர்யாவின் முதல் படம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த மே 15-ம் தேதி திரையரங்க்குளில் வெளியான படம் ‘கருப்பு’. இந்தப் படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார். நட்டி நட்ராஜ், இந்திரன்ஸ், சுவாசிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
நீதித்துறையில் நடக்கும் முறைகேடுகளை களைய, கடவுள் மனித அவதாரம் எடுக்கும் கதைக்களத்தைக் கொண்ட இப்படம், திரையரங்குகளில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் வரும் ஜூன் 12-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.