நாகப்பட்டினம் அருகே, வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த மூதாட்டியின் 5 பவுன் தங்க நகையை பறிக்க முயன்ற தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருக்கை கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி (65) என்ற மூதாட்டி, தனது வீட்டில் தனியாக இருந்தபோது, முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் திடீரென நுழைந்துள்ளார். அந்த நபர், மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறிக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி மற்றும் அவரது மருமகள் சத்தமிட்டுள்ளனர்.
சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டனர். பொதுமக்கள் வருவதைக் கண்ட மர்ம நபர், அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால், பொதுமக்கள் அவரை விடாமல் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். பிடிபட்ட நபரை கருவேலங்காட்டில் ஒரு மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழ்வேளூர் போலீஸார், பொதுமக்களிடம் இருந்து அந்த நபரை மீட்டனர். நடத்திய விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த பாரதி (26) என்பதும், தவெக கட்சியின் உள்ளூர் கிளைப் பொறுப்பாளர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.