நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மகரஜோதி (39) என்ற பெண், தனது காதலனை மகிழ்விப்பதற்காக சக பெண் தோழிகளின் ஆபாச வீடியோக்களை எடுத்து அனுப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். விடுதியில் தங்கியிருந்த பெண்களின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதாகவும், அடிக்கடி செல்போனில் படம் பிடிப்பதாகவும் எழுந்த புகார்களின் அடிப்படையில் அவரது செல்போன் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வில், மகரஜோதி தனது காதலன் கண்ணனுக்கு, விடுதியில் தங்கியிருக்கும் பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அனுப்பியது அம்பலமானது. இது தொடர்பாக விடுதி காப்பாளர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் நாககுமாரி இது குறித்து விசாரணை நடத்தி, இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.
விசாரணையில், தனது காதலனை குஷிப்படுத்துவதற்காகவே இவ்வாறு செய்ததாக மகரஜோதி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், பல்வேறு கோணங்களில் வீடியோ எடுத்து அனுப்புமாறு அவரது காதலன் கண்ணன் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் மகரஜோதியை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மகரஜோதியின் காதலன் கண்ணன் கோவை வசித்து வருவது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் கண்ணனும் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.