பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, சென்னை கோட்டம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு ஆகிய நான்கு முக்கிய ரயில் நிலையங்களில், மருந்தகங்களுடன் கூடிய அவசர மருத்துவ வசதிகளை ஏற்படுத்த சென்னை ரயில்வே கோட்டம் ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரியுள்ளது. தெற்கு ரயில்வேயின் முக்கிய கோட்டமாக விளங்கும் சென்னை கோட்டத்தில், தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு திடீரென மருத்துவ உதவி தேவைப்பட்டால், ரயில்வே உதவி எண் அல்லது இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில முக்கிய ரயில் நிலையங்களில் தனியார் உதவியுடன் முதலுதவி மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், பயணிகளின் தொடர்ச்சியான கோரிக்கைகளை ஏற்று, இந்த நான்கு முக்கிய ரயில் நிலையங்களில் விரிவான மருத்துவ வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தகுதியான நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. இந்த மருத்துவ அறைகள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மருந்தகங்களுடன் இணைந்திருக்கும்.
இந்த மருத்துவ வசதிகள் மூலம், பயணிகளுக்குத் தேவையான அவசர மருத்துவ உதவிகள் உடனடியாக வழங்கப்படும். பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்கள், முதலுதவி வசதிகள், அவசர சிகிச்சை ஆதரவு, அத்தியாவசிய மருந்துகள், ஆம்புலன்ஸ் சேவை மற்றும் உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள் ஆகியவை 24 மணி நேரமும் தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்படும். தகுதியான மருத்துவமனைகள், சுகாதார சேவை நிறுவனங்கள் மற்றும் தேவையான அனுபவம் மற்றும் சட்டப்பூர்வ உரிமங்கள் கொண்ட மருத்துவ முகமைகள் இந்த திறந்தநிலை மின்-ஒப்பந்தப் புள்ளியில் பங்கேற்கலாம்.
இந்த ஒப்பந்தப் புள்ளி, அதிகப்படியான பயணிகள் வந்து செல்லும் முக்கிய ரயில் நிலையங்களில் தங்களின் பிராண்ட் அடையாளத்தை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொள்ள நிறுவனங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். விருப்பமுள்ள ஏலதாரர்கள் இந்திய ரயில்வேயின் மின்-கொள்முதல் அமைப்பு இணையதளமான www.ireps.gov.in மூலம் ஜூன் 1 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் ஒப்பந்தப் புள்ளிகளைச் சமர்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 80721 14520 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.