இந்தியாவின் புனித நகரங்களில் ஒன்றான வாரணாசி, இந்தியாவின் இரண்டாவது சைவ நகரமாக உருவெடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மோட்சத் தலமாக கருதப்படும் காசிக்கு வரும் பக்தர்களின் மன நிறைவை உறுதி செய்யும் வகையில், நகரின் இறைச்சிக் கடைகளை இடமாற்றம் செய்யும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, குஜராத்தில் உள்ள பாலிதானா மட்டுமே உலகின் முழுமையான சைவ நகரமாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஜைன ஆலயங்கள் அதிகம் உள்ளதாலும், இறைச்சி விற்பனை மற்றும் உட்கொள்ளல் கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாலும் இது தனித்துவமாக விளங்குகிறது. இந்த நிலையில், வாரணாசி மாநகராட்சி எல்லைக்குள் உள்ள சுமார் 350 முதல் 400 இறைச்சிக் கடைகளை அடுத்த ஆறு மாதங்களுக்குள் நகரின் புறநகர்ப் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய நகர மேயர் அசோக் திவாரி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த இடமாற்றப் பணிகள் 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டாடப்படும் தீபாவளிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராம்நகர், சுஜாபாத், கணேஷ்பூர், அவலேஷ்பூர் மற்றும் ஷிவ்பூர் ஆகிய ஐந்து குறிப்பிட்ட புறநகர்ப் பகுதிகளில் இந்த கடைகள் அமையும். வாரணாசியின் தெருக்களை சுத்தமாக வைத்தல், கழிவு மேலாண்மையை மேம்படுத்துதல், போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல் மற்றும் நகரின் கலாச்சார, ஆன்மீகத் தன்மையைப் பாதுகாத்தல் ஆகியவை இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கங்களாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாரணாசி பல்வேறு சமூகங்கள் மற்றும் உணவுப் பாரம்பரியங்களைக் கொண்ட ஒரு நகரம் என்றாலும், இறைச்சிக் கடைகளை இடமாற்றம் செய்வது ஒரு சவாலான காரியமாகும். இது வியாபாரிகள் மற்றும் மக்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், இந்த நடவடிக்கை வாரணாசியை ஒரு சைவ நகரமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.