சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் 49-வது மலர் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. கடந்த 22-ஆம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சியை காண தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர்.
ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்காவில் வண்ணமயமான மலர்களால் ஆன பல்வேறு வடிவங்கள் சுற்றுலாப் பயணிகளை பரவசப்படுத்துகின்றன. இதில் டெடிபியர் பொம்மை, விவசாயி உழவு செய்தல், கன்று குட்டியுடன் கறவை மாடு, பண்ணை வீடு, கற்பனை தேவதை, பரதநாட்டிய மங்கைகள், புளூட்டோ, கூபி போன்ற வடிவங்களும், இரட்டை இதயம் வடிவிலான செல்பி பாயிண்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதோடு, தங்கள் செல்போன்களில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
மலர் கண்காட்சி தொடங்கிய முதல் இரண்டு நாட்களில் மட்டும் 22 ஆயிரத்து 600 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரியவர்களுக்கு ரூ.60 மற்றும் சிறியவர்களுக்கு ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினசரி வந்து செல்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகளின் இந்த திடீர் வருகையால் ஏற்காடு மலைப்பாதை மற்றும் நகரப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஏற்காடு டவுன் பகுதி, ஏரிச்சாலை, அண்ணா பூங்கா சந்திப்பு, படகு இல்லம் போன்ற முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் சாலைகளில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.