சென்னையில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் பழங்குடியினர் தயாரிப்பு பொருட்களுக்கான விற்பனை மையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. மக்களின் சேவையை மேம்படுத்தும் நோக்கில், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் பல்வேறு சமூக முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில், பழங்குடியினர் கூட்டுறவு சந்தை மேம்பாட்டுக் கூட்டமைப்பு சார்பில் இந்த விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனை மையத்தில் பழங்குடியினரால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள், கைத்தறி பொருட்கள், இயற்கை உணவுப் பொருட்கள் மற்றும் காட்டு வளப் பொருட்கள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பழங்குடியின சமூகங்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கவும், அவர்களின் தயாரிப்புகளுக்கு நேரடி விற்பனை வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விற்பனை மையத்தை இந்திய பழங்குடியினர் சந்தைப்படுத்தல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜா முருகன், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ்.விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் பலர் கலந்துகொண்டனர்.
இந்த முயற்சி பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களின் பாரம்பரிய கலை மற்றும் கைவினைப் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு பாலமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற திட்டங்கள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
