தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு சற்று நேரத்தில் அறிவிக்கப்பட உள்ளது.
மார்ச் 10ஆம் தேதி காணாமல் போன மாணவி, அடுத்த நாள் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. குற்றவாளியை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என மாணவியின் பெற்றோரும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
சந்தேகத்திற்கிடமான 5 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. காட்டுப்பகுதியில் உள்ள காற்றாலை ஒன்றின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரனை கைது செய்தனர். இவர் ஏற்கனவே 2020ல் 65 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து நகை திருடிய வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தது விசாரணையில் தெரியவந்தது.
தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவடைந்த நிலையில், தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.