பள்ளிப்பட்டு: போக்சோ வழக்கை வாபஸ் பெறக் கோரி புகார் அளித்தவர் மற்றும் சாட்சியை மிரட்டிய பள்ளி தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்பு, செங்கல்வராயன் என்பவர் ஆஞ்சநேய நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அப்போது, பள்ளியில் 5-ம் வகுப்பு படித்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், செங்கல்வராயன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த வழக்கு திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த 15-ம் தேதி, இந்த வழக்கில் புகார் அளித்த சிரஞ்சீவி மற்றும் சாட்சியாக உள்ள ஜோதி ஆகியோர் பள்ளிப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த செங்கல்வராயன், போக்சோ வழக்கில் பொய் சாட்சி சொல்லி வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று இருவரையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிரஞ்சீவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், உதவி காவல் ஆய்வாளர் சிவா வழக்குப் பதிவு செய்தார். ஏற்கனவே ஜாமீனில் வெளிவந்திருந்த செங்கல்வராயனை, காவல்துறையினர் நேற்று மீண்டும் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.