வண்டலூர் அருகே மண்ணிவாக்கம் கிழக்கு மாடவீதியைச் சேர்ந்த சாந்தி (56) என்பவர் வீட்டில் இருந்த 24 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் திருடு போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாந்தியின் மகள், ஆட்டோ ஓட்டுநரான தட்சிணாமூர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சாந்தியும் அவரது மகளும் வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். கடந்த மே 22-ம் தேதி வேலைக்குச் சென்று மாலை வீடு திரும்பிய சாந்தி, பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து வண்டலூர் – ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், சாந்தியின் மருமகன் தட்சிணாமூர்த்தியை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், தட்சிணாமூர்த்தி தனது ஆட்டோவில் இரண்டு பெண்களை அழைத்து வந்து சாந்தி வீட்டிற்குள் நுழைவதும், சிறிது நேரம் கழித்து அங்கிருந்து வெளியேறுவதும் பதிவாகியிருந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், மாமியார் வீட்டில் இருந்து 24 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாயை தனது தோழிகளுடன் சேர்ந்து திருடியதை தட்சிணாமூர்த்தி ஒப்புக்கொண்டார். இதையடுத்து, தட்சிணாமூர்த்தி, அவருக்கு உடந்தையாக இருந்த தீபா (29) மற்றும் 17 வயது சிறுமி ஆகியோரை போலீசார் கைது செய்து, திருடப்பட்ட நகை மற்றும் பணத்தை மீட்டனர். பின்னர் மூவரையும் சிறையில் அடைத்தனர்.