தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் டூ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி, வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி ஒருவர் வீட்டில் இருந்து அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றபோது காணாமல் போனார். அடுத்த நாள், மார்ச் 11ஆம் தேதி, அவர் காட்டுப்பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, உடலில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தை அடுத்து, கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அலட்சியமாக செயல்பட்டதாக மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரவீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
காற்றாலை கோபுர சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனிஸ்வரனை மார்ச் 19ஆம் தேதி கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி, சம்பவத்தை நடித்துக் காட்ட வைத்து வீடியோ பதிவு செய்யப்பட்டது. குற்றவாளி கைது செய்யப்பட்டதை அடுத்து, மாணவியின் குடும்பத்தினர் அவரது சடலத்தை பெற்று 10 நாட்களுக்குப் பிறகு தகனம் செய்தனர்.
இந்த வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விரைந்து செயல்பட்ட போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. அனைத்து விசாரணை நடைமுறைகளும் நிறைவடைந்த நிலையில், மே 25ஆம் தேதி திங்கட்கிழமை, தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கினார். கொலை வழக்கில் குற்றவாளி தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.