சென்னையில் டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அபின் தினேஷ் மோதக் உத்தரவின் பேரில், 12 காவல் மாவட்டங்களிலும் துணை ஆணையர்களின் மேற்பார்வையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கவும், குற்றவாளிகளைக் கைது செய்யவும் காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேளச்சேரியில், J-7 காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழு, ரகசிய தகவலின் பேரில் வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் சோதனை நடத்தியது. அங்கு சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த பார் ஊழியர்கள் பிரபாகரன் மற்றும் சபரிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 180 மி.லி. அளவு கொண்ட 16 மதுபாட்டில்கள், 423 பீர்பாட்டில்கள் என மொத்தம் 439 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், திருவொற்றியூரில் H-8 காவல் நிலைய ஆய்வாளர் குழு, T.H சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் சோதனை நடத்தியது. சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட கார்த்திக், பிரபாகரன், கணேசா (எ) குறிஞ்சி கணேசன், வாஞ்சி நாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 8 மதுபாட்டில்கள் மற்றும் ரொக்கம் ரூ.200/- பறிமுதல் செய்யப்பட்டதுடன், பார் மூடப்பட்டது. மேலும், திருவொற்றியூர் E.E. ரோடு டாஸ்மாக் கடை அருகே மதுபாட்டில்கள் விற்பனை செய்த நீதி, ராஜபாண்டி, ரகுபதி, லெட்சுமணன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு, 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஏழுகிணறு, எஸ்பிளனேடு, புதுவண்ணாரப்பேட்டை, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக 6 பேர் கைது செய்யப்பட்டு, மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நுங்கம்பாக்கத்தில், தனியார் பார் ஒன்று அரசு நிர்ணயித்த நேரத்தை தாண்டி மது விற்பனை செய்தது கண்டறியப்பட்டு, பார் உரிமையாளர் கார்த்திக் இளம்வழுதி, மேலாளர் ஸ்டாலின் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பார் மூடப்பட்டது. சென்னை பெருநகர காவல் துறை சட்டவிரோத மது விற்பனைக்கு எதிராக தொடர் சோதனைகளை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.