சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் நேரத்தில் திமுகவினரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தவெகவைச் சேர்ந்த 8 பேருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 23 அன்று நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ராயப்பேட்டையில் திமுகவினர் வாக்காளர் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தவெகவைச் சேர்ந்த ரதி, அவரது கணவர் பாஸ்கர், மகன் சூர்யா, கணவரின் தம்பி காந்தி மற்றும் தனுஷ், வாசுதேவன், கவுதமன், விக்னேஷ் ஆகிய 8 பேர் அங்கு வந்து திமுகவினரை தாக்கி, மேஜை, நாற்காலிகளை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த கே.வி.மோகன் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், தவெகவைச் சேர்ந்த 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி ரதி, பாஸ்கர் உள்ளிட்ட 8 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் ஜி.மோகனகிருஷ்ணன், 'ஏற்கனவே ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் திமுகவினர் மீது மனுதாரர் புகார் அளித்ததால், அதற்கு பழிவாங்கும் நோக்கில் திமுகவினர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் மனுதாரர்களுக்கு எதிராக பொய் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரை ராயப்பேட்டை காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தி உண்மைத் தன்மையை ஆராயாமல் பொய் வழக்கைப் பதிவு செய்துள்ளார். மனுதாரர்கள் மீது இதற்கு முன்பாக எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்பதால் அனைவருக்கும் முன்ஜாமீன் வழங்க வேண்டும்' என வாதிட்டார். போலீஸார் தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.பாலாஜி இதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பி.தனபால், மனுதாரர்கள் ஏற்கனவே திமுகவினர் மீது புகார் அளித்திருப்பதும், அவர்களும் இவர்கள் மீது புகார் கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. தேர்தல் பணி தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளது. எனவே, இந்த வழக்கில் மனுதாரர்கள் 8 பேருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுதாரர்கள் அனைவரும் சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்பில் சொந்த ஜாமீன் மற்றும் அதே மதிப்பில் இரு நபர் ஜாமீன் வழங்க வேண்டும். மேலும், 4 வாரங்களுக்கு சனிக்கிழமைதோறும் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என நீதிபதி முக்கிய நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டுள்ளார்.