புதிதாக பொறுப்பேற்றுள்ள தொழில்துறை அமைச்சர், மாநிலத்தின் நிதி நிர்வாகம் குறித்து அடிப்படைப் புரிதல் ஏதுமின்றி, "பத்தரை லட்சம் கோடி எடுத்துட்டு கழுவிட்டுப் போய்ட்டாங்க" என்று அவதூறு பரப்புவது விஷமத்தனமானது மட்டுமல்ல, வன்மையாக கண்டிக்கத்தக்கதும் ஆகும் என முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பதிவில், "முற்றிலும் உண்மைக்குப் புறம்பாகவும், மாநிலத்தின் நிதி நிர்வாகம் குறித்தான சாதாரண அடிப்படைப் புரிதல் இல்லாமலும், 'பத்தரை லட்சம் கோடி எடுத்துட்டு கழுவிட்டுப் போய்ட்டாங்க” என்று போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழில்துறை அமைச்சர் அவதூறு பரப்புவதும், உள்நோக்கோடு கழகத்திற்கு எதிராக ஆதாரமில்லாமல் மக்களிடையே ஒரு மாய பிம்பத்தை சமூக வலைதள ஜோடனைகள் மூலம் கட்டமைக்க முயற்சிப்பதும், விஷமத்தனமானது மட்டுமல்ல; வன்மையாகக் கண்டிக்கத் தக்கனவும் ஆகும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசு நிர்வாகத்தில் அனுபவமின்மை காரணமாக, மக்களை ஏமாற்றிக் குழப்பும் வகையில் தமிழ்நாட்டின் நிதி நிர்வாகம் குறித்து இட்டுக்கட்டிக் கூறுவது அவரது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. இருப்பினும், அரசு நிர்வாகத்திலும், அமைச்சரவையிலும் பல ஆண்டுகள் அனுபவமிக்கவரான நிதி அமைச்சர் செங்கோட்டையனும், நிதித்துறை நிர்வாக நடைமுறைகளில் நேரடி அனுபவமிக்க தற்போதைய நிதித்துறை செயலாளரும் இடித்துரைத்து தொழில் துறை அமைச்சரின் கற்பனைக் குதிரைக்குக் கடிவாளம் போட்டு நிறுத்த முன்வருவார்களா? அல்லது பொய்யும், புனைகதைகளும் மிக்க இத்தகைய மலிவான பிரச்சாரங்களுக்குத் துணை போகப் போகிறார்களா?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்ற பிறகு, தனது முதல் உரையில் தமிழக அரசின் கஜானா காலியாக இருப்பதாகக் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து, தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கீர்த்தனாவும் இதேபோல் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், தங்கம் தென்னரசுவின் கண்டனம் முக்கியத்துவம் பெறுகிறது.