2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் பதவிகளில் இருந்து விலகி ஆளும் தவெகவில் இணைந்திருப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவர்களின் இந்த செயலும், அவர்களை சேர்த்துக் கொண்ட ஆளும் கட்சியின் நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 20 நாட்களே ஆன நிலையில், 3 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவி விலக வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியை அன்புமணி எழுப்பியுள்ளார். காவிரி பிரச்சினைக்காகவோ அல்லது தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவோ அவர்கள் தங்களின் பதவிகளை தியாகம் செய்யவில்லை என்றும், மாறாக ஆளும் கட்சியில் சேர்ந்து அதிகாரத்தை சுவைக்க வேண்டும் என்ற துடிப்பே அவர்களின் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தூய அரசியலை முன்னெடுப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய், இத்தகைய செயல்களை எவ்வாறு அனுமதிக்கிறார் என்பதுதான் தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் கேள்வி என்றும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார். முதல்வரின் அனுமதி இல்லாமல் அவர்கள் ஆளும் கட்சியில் இணைய வாய்ப்பில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தவெகவில் இணையும் மூவரும் எதையும் எதிர்பார்க்காமல் இணைந்திருக்க வாய்ப்பில்லை என்றும், அந்தத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு, அதன் மூலம் ஆளுங்கட்சி உறுப்பினராக இருப்பதால் கிடைக்கும் பயன்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டுதான் சேர்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதை அனுமதிப்பது எந்த வகையில் தூய அரசியல் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். அதிமுகவிலிருந்து விலகிய மூவரும் அரசியல் வல்லுனர்கள் என்பதாலோ, பல்துறை வித்தகர்கள் என்பதாலோ அவர்களை தவெக தலைமை சேர்த்துக் கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் அவர்களை நிறுத்தி வைத்து வெற்றி பெறச் செய்தால் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை பெரும்பான்மை வலிமையை நோக்கி முன்னேறும் என்பதுதான் இதற்கான காரணம். இதன் மூலம் முதல்வர் விஜய் கூறி வந்த தூய அரசியல் மடிந்து விட்டது.
ஆளும் கட்சியில் இணைந்த 3 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வெற்றியில் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களின் கடுமையான உழைப்பு அடங்கியிருக்கிறது. அதற்கு மதிப்பளிக்காமல், வாக்களித்த மக்களின் தீர்ப்பை அவமதித்து விட்டு பதவி சுகத்திற்காக இன்னொரு கட்சியில் சேர்வது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது. தூய்மையான, நேர்மையான அரசியலை செய்வதில் முதல்வர் விஜய்க்கு நம்பிக்கையிருந்தால் அவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; குறைந்தபட்சம் அவர்களுக்கு கட்சியில் பதவியோ அல்லது இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்போ வழங்கக் கூடாது என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.