சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கருப்பையா ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்ததை அடுத்து, விஜய்க்கு பெரும்பான்மை பலம் கிடைத்தது. இதையடுத்து இன்று அவர் முதல்வராக பதவியேற்றார்.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் அவருக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவரோடு, ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இதையடுத்து, தலைமைச் செயலகம் வந்த முதல்வர் விஜய், தனது அலுவலகப் பணிகளைத் தொடங்கினார். பின்னர், பெரியார் திடலுக்குச் சென்ற முதல்வர் விஜய், பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதன் தொடர்ச்சியாக ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்த விஜய், தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். அவருடன் அமைச்சர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், கருப்பையாவுக்கு தற்காலிக சபாநாயகராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து அவருக்கு ஆளுநர் வாழ்த்து தெரிவித்தார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா நாளை காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா, உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.
சோழவந்தான் தனித் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான கருப்பையா, 2011-16ல் அதிமுக எம்.எல்.ஏ ஆக இருந்தவர். நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தவெகவில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
வரும் 12ம் தேதி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் தொடர்ச்சியாக வரும் 13ம் தேதி, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை முதல்வர் விஜய் கோர உள்ளார்.