நைஜீரியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அபு பிலால் (44) கொல்லப்பட்டார். இது ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்நாட்டின் வடகிழக்கு பகுதியான லேக் சாட் பிராந்தியத்தில் சுமார் 7,000 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் ஒருவரான அபு பிலால், அமைப்பின் முக்கிய தலைவராக செயல்பட்டு வந்துள்ளார். தற்போது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவராக அபு ஹப்ஸ் அல்-ஹாமிஷி அல்-குராஷி உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய தலைவராக அபு பிலால் இருந்து வந்துள்ளார். இவர் நைஜீரியாவில் வாழும் கிறிஸ்தவர்களை குறிவைத்து அடிக்கடி தாக்குதல்கள் நடத்தி வந்துள்ளார். இதனால் கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 50,000-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராட நைஜீரிய ராணுவ வீரர்களுக்கு அமெரிக்கா சிறப்பு பயிற்சி அளித்து வருகிறது. இதற்காக 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் நைஜீரியாவில் முகாமிட்டுள்ளனர். இந்த சூழலில், சுமார் 2,000 கி.மீ. தொலைவு நீளம் கொண்ட லேக் சாட் ஏரிப் பகுதியின் ஒரு தீவில் அபு பிலால் பதுங்கி இருப்பதாக அமெரிக்க உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில், அமெரிக்க ராணுவம் மற்றும் நைஜீரிய ராணுவம் இணைந்து அந்த தீவை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியது. இதில் ஐஎஸ்ஐஎஸ் மூத்த தலைவர் அபு பிலால் கொல்லப்பட்டார். இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமூக வலைதளத்தில், 'ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் அபு பிலாலை அழித்துள்ளோம். இதன் மூலம் உலக அளவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது' என்று பதிவிட்டுள்ளார்.