ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பிற்கு எதிரான அமெரிக்க ராணுவத்தின் அதிரடி நடவடிக்கை தொடர்கிறது. நைஜீரிய அரசு படைகளுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தளபதி அபு-பிலால் அல்-மினூகி கொல்லப்பட்டுள்ளார்.
இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், 'எனது வழிகாட்டுதலின்படி, துணிச்சலான அமெரிக்கப் படைகளும் நைஜீரிய ஆயுதப்படைகளும் இணைந்து, உலகின் மிகத் தீவிரமான பயங்கரவாதியை போர்க்களத்திலிருந்து அகற்றும் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர். உலகளவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் 2-வது தளபதியான அபு-பிலால் அல்-மினூகி, ஆப்பிரிக்காவில் மறைந்து கொள்ளலாம் என்று நினைத்தார். ஆனால், அவரைப் பற்றிய தகவல்களை எங்கள் உளவாளிகள் தொடர்ந்து சேகரித்து வந்தனர் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. இனி அவர் ஆப்பிரிக்க மக்களை அச்சுறுத்தவோ, அமெரிக்கர்களைக் குறிவைக்கும் நடவடிக்கைகளைத் திட்டமிடவோ மாட்டார்' என்று தெரிவித்தார்.
அபு-பிலால் அல்-மினுகி கொல்லப்பட்டதன் மூலம், ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பின் உலகளாவிய செயல்பாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பங்களிப்பு அளித்த நைஜீரியா அரசாங்கத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். அபு-பிலால் அல்-மினுகி, ஆப்பிரிக்காவின் சஹேல் பிராந்தியத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவின் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஒரு மூத்த தலைவர் ஆவார். மேலும், அந்த அமைப்பின் சர்வதேச கட்டமைப்பில் முக்கிய நபராகவும் இவர் இருந்து வந்தார்.
இந்த அதிரடி நடவடிக்கை, பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அமெரிக்காவின் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் பயங்கரவாதக் குழுக்களின் தலைவர்களை குறிவைத்து நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்கள், பயங்கரவாத அமைப்புகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நைஜீரியா அரசுடனான ஒத்துழைப்பு, இதுபோன்ற நடவடிக்கைகளின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது.