அமெரிக்க மண்ணில் மனிதக் கடத்தல் கும்பலின் சதி அம்பலமாகியுள்ளது. கனடா எல்லையிலிருந்து ஆட்களை அழைத்து வந்து, அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளுக்கு, குறிப்பாக நியூயார்க் மாகாணத்தில் உள்ள மறைவிடங்கள் மற்றும் பிளாட்ஸ்பர்க் ஹோட்டல்களுக்கு அனுப்ப ஓட்டுநர்களை ஏற்பாடு செய்த ஒரு 22 வயது இந்திய இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட இளைஞர், கடத்தப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் தனது ஓட்டுநர்களுக்குப் பணம் கொடுத்தது மட்டுமின்றி, இந்தச் செயலில் தனக்கும் பங்குண்டு என எதிர்பார்த்துள்ளார். இந்தியா மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்தைச் சேர்ந்த 12 வெளிநாட்டினரை கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாகக் கடத்த இவர் உத்தரவிட்டுள்ளார். கடத்தப்பட்ட ஒவ்வொரு வெளிநாட்டினருக்கும் 100 டாலர் என தனது கூட்டாளிக்கு இவர் பணம் வழங்கியுள்ளார்.
சம்பவத்தன்று, அமெரிக்க-கனடா எல்லையில் ஒன்றன்பின் ஒன்றாகச் சென்றுகொண்டிருந்த இரண்டு வாகனங்களை அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க இரு வாகனங்களும் அதிவேகத்தில் பறக்கத் தொடங்கின. இதனால், ஒரு துரத்தல் சம்பவம் அரங்கேறியது. ஒரு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகிச் சென்றது. மற்றொன்று நியூயார்க்கின் மூயர்ஸ் என்ற இடத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த வாகனங்களில், சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் கொண்டுவரப்பட்ட மொத்தம் 12 பேர் இருந்தனர்.
அந்நியர்களைக் கடத்த சதித்திட்டம் தீட்டியது மற்றும் நிதி ஆதாயத்திற்காக அந்நியர்களைக் கடத்தியது என நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த இளைஞர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது, அவருக்குக் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த வழக்கு தற்போது விசாரணை நிலையில் உள்ளது.