தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4 அன்று வெளியான நிலையில், மே 10ஆம் தேதி ஜோசப் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவருடன் ஒன்பது அமைச்சர்களும் பதவியேற்றனர். ஆனால், பதவியேற்று ஆறு நாட்கள் ஆகியும் அமைச்சர்களுக்கான துறைகள் இதுவரை ஒதுக்கப்படாதது பெரும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
துறைகள் ஒதுக்கப்படாததால், நிலுவையில் உள்ள பல்வேறு முக்கியப் பணிகள் தேக்கமடைந்துள்ளன. சுமார் 3000க்கும் மேற்பட்ட கோப்புகள் கையெழுத்திடப்படாமல் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இது துறை சார்ந்த பணிகளை முடக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், முதலமைச்சரின் தனிச்செயலாளர் செந்தில்குமார் இன்று ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, அமைச்சர்களுக்கான துறைகள் குறித்த விவரங்கள் ஆளுநரிடம் வழங்கப்பட்டதாகவும், அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான தகவல்களும் பரிமாறப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பது அமைச்சர்களுக்கும் துறைகள் ஒதுக்கப்படாத நிலையில், முதலமைச்சரின் தனிச்செயலாளர் ஆளுநரை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.