மும்பையில் மொஹரம் ஊர்வலத்தின் போது 15,000க்கும் மேற்பட்டோரைக் கொல்ல நடந்த பயங்கர சதி அம்பலமாகியுள்ளது. தெற்கு மும்பையில் வெள்ளிக்கிழமை இரவு ஷியா இஸ்லாமியர்கள் பங்கேற்ற மொஹரம் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பயாஸ் பிரேம்ஜி என்ற நபர், நோய் எதிர்ப்புச் சக்தி மாத்திரைகள் மற்றும் வலி நிவாரணிகள் எனப் பொய் கூறி மர்மமான மாத்திரைகளை விநியோகித்துள்ளார். இதை உட்கொண்ட சிலருக்குக் கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டதால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
ஊர்வலத்தில் இருந்த மூன்று பெண் தன்னார்வலர்கள் பயாஸ் பிரேம்ஜியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து அவரைத் தடுத்து நிறுத்தி போலீசாருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பைகுல்லா போலீசார் பயாஸ் பிரேம்ஜியைக் கைது செய்து, அவரிடமிருந்து மாத்திரைகளைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆன்லைனில் 30,000 காலி கேப்சூல்களையும், எலி விஷத்திற்குப் பயன்படுத்தப்படும் 50 கிலோ ‘சிங்க் பாஸ்பைடு’ என்ற உயிர்க்கொல்லி வேதிப்பொருளையும் வாங்கி, தனது ஹோட்டல் அறையிலேயே விஷ மாத்திரைகளைத் தயாரித்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். குறைந்தது 15,000 பேரைக் கொல்ல திட்டமிட்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
கைதான பயாஸ் பிரேம்ஜி சமீப காலங்களில் ஈரான் மற்றும் ஈராக் நாடுகளுக்குப் பலமுறை சென்று வந்துள்ளார். இதன் பின்னணியில் சர்வதேசச் சதி அல்லது பயங்கரவாத அமைப்புகளின் தூண்டுதல் உள்ளதா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மனைவியைப் பிரிந்ததால் ஏற்பட்ட மனச்சோர்வு காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்தாரா என்றும் ஆராயப்பட்டு வருகிறது.
தற்போது, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 123 (விஷம் கொடுத்துக் காயம் ஏற்படுத்துதல்) மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை மத்திய குற்றப்பிரிவினர் அவரை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.