தமிழகத்தில் எளிதாக ஆட்சியைப் பிடித்து முதல்வர் ஆகிவிடலாம், ஆனால் என்னால் முடியவில்லை என ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். தனது கட்சி கூட்டம் ஒன்றில் அவர் இவ்வாறு பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவர் மேலும் கூறுகையில், 'தமிழக அரசியலை நான் கவனித்து வருகிறேன். அங்கு கட்-அவுட் மற்றும் ஹாலோகிராம் மூலம் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்து, முதல்வர் ஆக முடிகிறது. இது எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது. நான் 15 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். ஆனால் என்னால் அது முடியவில்லை. அரசியல் கட்சியை நடத்த வேண்டுமானால் மக்களின் எதிர்பார்ப்புகளை அறிந்திருக்க வேண்டும். எதைப் பேசினாலும் அது குறித்து நாம் அறிந்திருக்க வேண்டும்' என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, தனது அரசியல் பயணத்தை தமிழக முதல்வர் விஜய்யின் அரசியல் எழுச்சியுடன் ஒப்பிடுவது குறித்து ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்திருந்தார். 'தமிழகத்தின் முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர் நாம் ஏன் ஆந்திராவில் கூட்டணி அமைத்தோம் என்ற கேள்வியை நம் ஆதரவாளர்கள் எழுப்பி வருகின்றனர். ஆனால், ஆந்திராவுடன் ஒப்பிடும்போது தமிழகத்தின் அரசியல் சூழல் வேறுபட்டு உள்ளது' என்றும் அவர் கூறியிருந்தார்.
சமூக மாற்றம் வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசியல் கட்சியை தொடங்கியதாகவும், முன்னாள் முதல்வர் என்டிஆரின் அரசியல் பயணத்தையும், நக்சலிச கொள்கைக்காக இளைஞர்கள் உயிர் தியாகம் செய்ததையும் பார்த்த அனுபவங்கள் தன்னை சிந்திக்க வைத்ததாகவும் பவன் கல்யாண் குறிப்பிட்டுள்ளார். பொது வாழ்வில் பதவி, அதிகாரத்தை விட சித்தாந்தம், கொள்கை முக்கியம் எனக் கருதி கட்சியை வழிநடத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தலில் தனித்து போட்டியிட்டு இருக்கலாம் என்றும், தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கக் கூடாது என்றும் தொண்டர்கள் கருதுவது தனது கவனத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சிரஞ்சீவி வாழ்த்து: கடந்த வாரம் முதல்வர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நடிகர் சிரஞ்சீவி, சிறந்த ஆட்சியின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடிப்பார் என நம்பிக்கை தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.