கேரள மாநிலம் வயநாடு மாவட்டம், மேப்பாடி அருகே கல்லாடி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் காணாமல் போன நிலையில், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் கல்லாடி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் வடமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம், சுரங்கப்பாதை நுழைவுவாயில் அருகே 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதனால் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு, மலைப்பகுதியிலிருந்து நீரோடு மண்ணும் கீழ்நோக்கி அடித்து வரப்பட்டது. மேலும், அப்பகுதியில் இருந்த சாலை மற்றும் பாலத்தையும் மண் மூடியது.
இந்த நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு, மேப்பாடியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் வயநாடு போலீஸார் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்தவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இரவு நேரம் மற்றும் கனமழை காரணமாக முந்தைய நாள் இரவு மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், நேற்று 2-வது நாளாக காணாமல் போன 5 பேரைத் தேடும் பணி தொடர்ந்தது. சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனத்தின் மேலாளர் விக்ரம் ராணா (இமாச்சல பிரதேசம்), என்ஜினீயர் ராகுல், ஆபரேட்டர் முகமது இம்ரான் (பீகார்), சர்வேயர் ராகேஷ் குஜத் (மேற்கு வங்கம்), சர்வேயர் அஸ்ஹருதீன் அன்சாரி (உத்தர பிரதேசம்) ஆகிய 5 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களின் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை.
உயிரிழந்த 5 பேரில், தனியார் நிறுவனத்தின் ஆபரேட்டர் சந்திரபான் (மத்திய பிரதேசம்), போர்மேன் பிகாஷ் குமார், தொழிலாளி அன் சந்திரா பான் (ஜார்க்கண்ட்) ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டு, கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் உடல்கள் பின்னர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் 4 பிரிவுகளாக மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், சினிபர் மற்றும் கடாவர் வகையைச் சேர்ந்த 2 மோப்ப நாய்களின் உதவியுடன் மண்ணுக்குள் புதைந்தவர்களைத் தேடி வருகின்றனர். சுரங்கப்பாதை நுழைவுவாயில் பகுதியிலிருந்து சுமார் 200 மீட்டர் சுற்றளவில் 7 முதல் 10 அடி உயரம் வரை மண் குவிந்துள்ளது.
இந்த நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள வசித்து வந்த 33 குடும்பங்களைச் சேர்ந்த 93 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
