சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து அவதூறாக கருத்துக்களை பதிவிட்டதாக யூடியூபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனு இன்று (ஜூலை 28) நீதிபதி விக்டோரியா கௌரி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
வலைப்பேச்சு மீடியாவைச் சேர்ந்த பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் உள்ளிட்ட யூடியூபர்கள், சீமான் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தரக்குறைவான பதிவுகளை வெளியிட்டு அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இது அரசியல் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட அவதூறு பிரச்சாரம் என்றும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் காவல்துறை இதுவரை முதல் தகவல் அறிக்கை (FIR) கூட பதிவு செய்யவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதி விக்டோரியா கௌரி, காவல்துறை நடவடிக்கைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி கடும் அதிருப்தி தெரிவித்தார். திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதற்கு காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்ததை சுட்டிக்காட்டிய நீதிபதி, சீமான் விவகாரத்தில் ஏன் அதேபோன்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
'சீமான் தேர்தலில் தோற்கலாம், வெற்றி பெறலாம். ஆனால் தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல்வாதியாக அவர் உருவாகி உள்ளார்' என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
மேலும், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் இடம் விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் ரூ. 100 கோடி பெற்றதாக பேசிய யூடியூபர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டியது. ஆனால், சீமான் மீது அவதூறாக பேசினால் மட்டும் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
'இதற்கு மட்டும் எப்படி உடனடியாக நடவடிக்கை எடுத்தீர்கள். காவல்துறை பாரபட்சம் பார்க்கிறதா? ஒரு தலைவர் குறித்து அவதூறாகவோ அல்லது அசிங்கமாகவோ பேசுவதை வேடிக்கை பார்க்க முடியாது. இந்த வழக்கை பொறுத்தவரை யூடியூபர்கள், சீமானை மிகவும் கொச்சையாகவும், தரக்குறைவாகவும் விமர்சித்துள்ளனர். இதனை ஏற்க முடியாது' என்று நீதிபதி கடுமையாக சாடினார்.
எனவே, இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, நாளை (அதாவது இன்று) நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அவதூறு வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு காவல்துறைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
