திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியில் இயங்கி வந்த தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இந்த துயரச் சம்பவத்தில் இதுவரை 74 வடமாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு, தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 21 ஆம் தேதி நிகழ்ந்த இந்த விபத்தில், முதலில் 13 வடமாநில பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் விமானம் மூலம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜார்க்கண்டை சேர்ந்த பெண் ஒருவர் இன்று மாலை உயிரிழந்தார். மேலும் ஒருவரின் மரணத்தைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பலர் கோமா நிலையில் இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த விபத்து தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வந்த சுரேஷ் என்பவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட இந்த அமோனியா வாயு கசிவு சம்பவம், தொழிலாளர் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் எனப் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இது குறித்து விரிவான விசாரணை நடத்தவும் கோரிக்கை எழுந்துள்ளது.