தமிழக அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தை எஸ்டிபிஐ கட்சி வரவேற்றுள்ளது. அதே சமயம், முஸ்லிம் சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என அக்கட்சி மாநில தலைவர் முகம்மது முபாரக் கூறியுள்ளார்.
கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டதை எஸ்டிபிஐ கட்சி வரவேற்பதாக தெரிவித்துள்ளது. ஆனால், சமூக நீதி அடிப்படையில் அமைச்சரவை விரிவாக்கத்தை பார்க்கும்போது, முஸ்லிம் சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளதாக அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
சமூகநீதி அடிப்படையில் அனைத்து சமூகங்களுக்கும் மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விடக் கூடுதல் இடங்கள் இந்த தவெக அரசில் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம் மிகக் குறைவாகவே உள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அனைத்துச் சமூகத்தின் பங்களிப்பையும் உரிய பிரதிநிதித்துவத்தையும் உறுதிபடுத்த வேண்டியது இந்த அரசின் கடமையாகும். எனவே, ஆளுங்கட்சியான தவெக-விலிருந்தும் வெற்றிபெற்றுள்ள கூடுதலான முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தமிழக அமைச்சரவையில் குறைந்தது ஐந்து முஸ்லிம் அமைச்சர்களாவது இடம்பெறுவதை முதல்-அமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. மேலும், முஸ்லிம் அமைச்சர்களை வெறும் சிறுபான்மையினர் நலத்துறை போன்ற குறிப்பிட்ட துறைகளுக்குள் முடக்கிவிடாமல், கல்வி, தொழில், வருவாய் போன்ற முக்கிய துறைகளையும் ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. கேரளாவில் முஸ்லிம் லீக் அமைச்சர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதை உதாரணமாகக் காட்டி, அதிகாரப் பகிர்வும் சமத்துவமான துறை ஒதுக்கீடும் மட்டுமே உண்மையான சமூக நீதியை நிலைநாட்டும் என எஸ்டிபிஐ கட்சி தெரிவித்துள்ளது.