நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில், கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு அணி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான மற்றொரு அணி என அதிமுக இரண்டாகப் பிரிந்தது, இது கட்சிக்குள் மீண்டும் பிளவு ஏற்படுவதற்கான அச்சத்தை ஏற்படுத்தியது.
சட்டமன்றத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க பெரும்பான்மையை நிரூபித்த வாக்கெடுப்பின் போது, எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்புக்கு 25 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தது. அதே சமயம், எடப்பாடி பழனிசாமி தரப்பு அணியில் 22 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்த சூழலில், த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏ.க்களின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். மேலும், கட்சி கொறடாவின் உத்தரவை மீறியதாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் மனு அளித்தார். இதற்கு பதிலடியாக, எஸ்.பி.வேலுமணி தரப்பும் கொறடா உத்தரவை மீறியதாக எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை கோரி சபாநாயகரிடம் மனு அளித்தது.
இரு தரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இரு தரப்பு மனுக்களும் ஆய்வில் இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்திருந்தார். இதற்கிடையில், சிவி சண்முகம் தரப்பைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அதேபோல், ஆற்காடு சுகுமார், பண்ருட்டி மோகன், காங்கயம் நடராஜன், சங்கரன்கோவில் திலீபன், அந்தியூர் ஹரிபாஸ்கர் ஆகிய 5 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இது சிவி சண்முகம் தரப்புக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்பட்டது.
இந்த பின்னணியில், கட்சி மூத்த நிர்வாகிகள் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி அணிகளுக்கு இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.