மும்பையைச் சேர்ந்த கொலை குற்றவாளி ஒருவர், தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு 12 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகராக நடித்து வந்துள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குஜராத்தைச் சேர்ந்த ஹேமந்த் மோடி (53) என்பவர், 2005 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றார். மெஹ்சானா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்ட அவர், 2014 ஜூலை மாதம் 30 நாட்கள் பரோலில் வெளியே வந்து, பின்னர் போலீஸாரிடம் சரணடையாமல் தலைமறைவானார்.
மும்பைக்குச் சென்ற ஹேமந்த் மோடி, அங்கு 'ட்விங்கிள் தவே', 'ஸ்பந்தன் மோடி' போன்ற புனைப்பெயர்களுடன் தனது அடையாளத்தை முழுமையாக மாற்றிக்கொண்டு பாலிவுட் திரையுலகில் நுழைந்தார். கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக, 'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்', 'ஜெயேஷ் பாய் ஜோர்தார்', 'L2: எம்புரான்', 'லாகூர் 1947' போன்ற பல பெரிய பட்ஜெட் திரைப்படங்களிலும், சில குஜராத்தி தொடர்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் அகமதாபாத் வந்தபோது, கீகண்டா மெட்ரோ நிலையம் அருகே குற்றப்பிரிவு போலீஸாரால் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது, மீதமுள்ள சிறைத் தண்டனையை அனுபவிப்பதற்காக அவர் மீண்டும் மெஹ்சானா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஒரு கொலை குற்றவாளி தனது அடையாளத்தை மறைத்து திரைப்படங்களில் நடித்த சம்பவம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.