இந்தியாவில் பிறந்து அயர்லாந்து அணிக்காக விளையாடும் வேகப்பந்து வீச்சாளர் ஜெய் முன்ட்ரா, இந்திய அணிக்கு எதிரான தனது டி20 சர்வதேச அறிமுகப் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன் மூலம், மேத்யூ ஹம்ப்ரிஸைத் தொடர்ந்து, தனது அறிமுகப் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த இரண்டாவது அயர்லாந்து பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். தனது முதல் சர்வதேச விக்கெட்டாக சஞ்சு சாம்சனை போல்டாக்கி ஜெய் முன்ட்ரா சாதனை படைத்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான போட்டியில், ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் பந்துவீச வந்த வலது கை வேகப்பந்து வீச்சாளரான ஜெய் முன்ட்ரா, 4 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்த சஞ்சு சாம்சனை போல்டாக்கி, அயர்லாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் தான் வீசிய முதல் பந்திலேயே சஞ்சு சாம்சனை வீழ்த்தி முன்ட்ரா அசத்தினார். மணிக்கு 139 கி.மீ வேகத்தில் வீசப்பட்ட பந்தை அடிக்க முயன்ற சாம்சனின் பேட்டில் பட்ட பந்து நேராக ஸ்டம்பைத் தாக்கியது.
இதற்கு முன்னர், கடந்த 2023 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான அயர்லாந்து பந்துவீச்சாளர் மேத்யூ ஹம்ப்ரிஸ், தனது முதல் பந்திலேயே ரிஷாத் ஹொசைனை வீழ்த்தி இந்தச் சாதனையை முதலில் படைத்திருந்தார். அந்தப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தானில் பிறந்த ஜெய் முன்ட்ரா, பஞ்சாப்பைச் சேர்ந்த சிமி சிங்கிற்குப் பிறகு அயர்லாந்து அணிக்காக விளையாடும் இரண்டாவது ஆசிய கிரிக்கெட் வீரர் என்ற சிறப்பையும் பெறுகிறார். ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டோங்க் என்ற சிறிய நகரில் பிறந்த முன்ட்ரா, சிறுவயதிலேயே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டு ஒரு அகாடமியில் சேர்ந்தார். ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளராகத் தொடங்கினாலும், தனது 16 வயதில் அவர் ஒரு டாப்-ஆர்டர் பேட்டராகவும், இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் மாறினார். 2021 ஆம் ஆண்டில், தனது 24 ஆவது வயதில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் துறையில் முதுகலை பட்டம் பெறுவதற்காக அயர்லாந்து சென்ற அவர், அங்கு தனது படிப்பைத் தொடர்ந்துகொண்டே தனது கிரிக்கெட் கனவையும் வளர்த்துக்கொண்டார்.