தமிழகத்தில் அரிசி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. தஞ்சை பகுதி மட்டுமின்றி, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்கு அதிக அளவில் அரிசி விற்பனைக்கு வருகிறது. வழக்கமாக, தஞ்சையில் விளையும் மோட்டா ரக அரிசியை விட கர்நாடகாவில் இருந்து வரும் பொன்னி சன்னரக அரிசி அதிக அளவில் விற்பனையாகிறது.
சென்னையை அடுத்த ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள அரிசி ஆலைகளுக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து அதிக அளவில் நெல் அரவைக்கு வரும். ஆனால், தற்போது கர்நாடகாவில் நெல் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், அம்மாநில வியாபாரிகள் ஆந்திரா மற்றும் தஞ்சாவூர் சென்று அரிசியை வாங்கிச் செல்கின்றனர். இதன் காரணமாக, அரிசி விலையில் 10 முதல் 25 சதவீதம் வரை உயர்வு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, பொன்னி சன்னரக அரிசி விலை அதிகபட்சமாக 25 சதவீதமும், மோட்டா ரக அரிசி 10 சதவீதமும், பாசுமதி அரிசி 10 சதவீதமும் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ அரிசியின் விலை பல ரூபாய் உயர்ந்துள்ளது.
முன்னதாக, ரூ.1,400-க்கு விற்பனை செய்யப்பட்ட 26 கிலோ பொன்னி சன்னரக அரிசி தற்போது ரூ.1,700 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், ரூ.650-க்கு விற்பனை செய்யப்பட்ட 10 கிலோ பொன்னி சன்னரக அரிசி ரூ.800 ஆகவும், ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்ட 5 கிலோ பொன்னி சன்னரக அரிசி ரூ.420 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.
மேலும், கர்நாடகாவில் இருந்து விற்பனைக்கு வரும் ஸ்டீம் வகை (சிங்கிள் பாயில்) பொன்னி அரிசியின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ராய்ச்சூர் பொன்னி அரிசியின் விலை 26 கிலோவுக்கு ரூ.1,250-ல் இருந்து ரூ.1,700 ஆக உயர்ந்துள்ளது.
பாசுமதி அரிசியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ரூ.2,200 முதல் ரூ.2,300 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த 30 கிலோ பாசுமதி அரிசி தற்போது ரூ.2,800 முதல் ரூ.3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. குறைந்தபட்சமாக ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பாசுமதி அரிசி தற்போது ரூ.85 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த அரிசி விலை உயர்வு டிசம்பர் மாதத்திற்கு பிறகு குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விலை உயர்வால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.




