தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதாகக் கூறி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது லாக்கப் மரணம் இல்லை என மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாசலம் என்பவர், சமீபத்தில் தெற்கு காவல் நிலைய போலீசாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து பிணையில் வெளிவந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கடுமையான தலைவலி ஏற்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நரம்பியல் சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைப் பிரிவில் இருந்தபோது, அருணாசலம் ஒரு வீடியோ பதிவில், 'காவல் நிலையத்தில் தன்னை போலீசார் லத்திகளால் கொடூரமாகத் தாக்கியதாகவும், தலையிலும் உடலிலும் பலத்த காயங்களை ஏற்படுத்தியதாகவும்' கண்ணீருடன் வாக்குமூலம் அளித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை அருணாசலம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உறவினர்களும் நண்பர்களும் தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு திரண்டு, காவல்துறையின் அத்துமீறலுக்கு எதிராகத் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறை சித்திரவதையால் மட்டுமே வாலிபர் உயிரிழந்ததாகக் குற்றம் சாட்டியுள்ள குடும்பத்தினர், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், அதுவரை உடலை வாங்கப் போவதில்லை என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆர்வலர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் பலத்த கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுனில், 'தூத்துக்குடியில் இளைஞர் அருணாச்சலத்தை அடிக்கவில்லை என்றும், அவரது மரணம் லாக்கப் மரணம் இல்லை' என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், 'கைதான அன்றே அருணாசலம் மயங்கி விழுந்த தகவலை உறவினர்களுக்குத் தெரிவித்தோம். காவல் நிலையத்தில் மயங்கி விழுந்த அருணாசலத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு மீண்டும் மயங்கி விழுந்தார். கைது செய்யப்பட்ட அன்றைய தினமே அருணாசலம் மயங்கி விழுந்த தகவலை உறவினர்களுக்கு அளித்தோம். மயங்கி விழுந்த அருணாசலத்தை பெற்றோர் மற்றும் காவலர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அருணாசலத்தின் தலையில் கட்டி இருந்ததாக மருத்துவர்கள் கூறினர். அருணாசலத்தை நாங்கள் அடிக்கவில்லை, இது லாக்கப் மரணம் இல்லை' என மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் தெரிவித்துள்ளார்.
