நீட் தேர்வில் மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை ஏன் பாதுகாக்கிறீர்கள் என மத்திய அரசுக்கு CJP நிறுவனர் அபிஜித் தீப்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் செய்தியாளர்களிடம் பேசிய கரப்பான் ஜனதா பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே, சமூக சேவகர் சோனம் வாங்சுக் கடந்த 25 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இதுகுறித்து பிரதமர் மோடி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடியின் அரசியல் என்பது வெறும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வதும், தேர்தலில் வெற்றி பெறுவதும்தான் என்று அவர் விமர்சித்தார். மக்களின் கேள்விகளுக்கு பொறுப்புடனும், கடமையுடனும் பதிலளிப்பது அரசியல் கடமைகளில் ஒன்று என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நீட் தேர்வின் காரணமாக பல மாணவர்கள் உயிரிழந்த பிறகும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாக்கிறீர்கள் என்பதை நாட்டு மக்களுக்கு மத்திய அரசு விளக்க வேண்டும் என அபிஜித் தீப்கே வலியுறுத்தினார்.
மேலும், இந்தப் போராட்டம் குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்ய 34 நாட்கள் ஆகிவிட்டதாகவும், அரசாங்கம் இன்னும் அமைச்சர் தர்மேந்திர பிரதானைப் பாதுகாப்பது வெட்கக்கேடானது என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.
மாணவர்களின் போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் வெளியாட்கள் சிலர் போராட்டத்திற்குள் நுழைக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். காவல் துறையினர் ஒரு லாரி நிறைய கற்களை வரவழைத்து, பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்திற்குள் ஊடுருவி, காவல் துறையினர் மீது கல்லெறிந்து, அதன் மூலம் போராட்டக்காரர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாகத் தலையிட்டு, மாணவர்களின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், போராட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
