திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி ரிப்கா பாத்திமா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நுரையீரலை தாக்கும் இந்த தீவிர தொற்றுநோய், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களை எளிதில் பாதிக்கிறது.
சம்பவம் குறித்த முழு விவரம் இதோ: மேலப்பாளையம் பெரிய குத்பா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த ரசூல் என்பவரின் மகள் ரிப்கா பாத்திமாவுக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து, பெற்றோர் அவரை நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமிக்கு நிமோனியா பாதிப்பு இருப்பதை உறுதி செய்து தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுகாதார சீர்கேடு அதிகரித்து, கொசுக்களின் பெருக்கத்தால் காய்ச்சல் பரவல் அதிகமாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்தச் சூழலில் சிறுமியின் மரணம் மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் இதுகுறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர். நெல்லை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் முரளி கூறுகையில், "உயிரிழந்த சிறுமிக்கு நுரையீரலில் தீவிர பாதிப்பு இருந்தது. இது நிமோனியா காய்ச்சல் என மருத்துவத் துறையில் குறிப்பிடப்படுகிறது. நாங்கள் அப்பகுதியில் உள்ள மற்ற குழந்தைகளுக்கும் உடனடியாக மருத்துவ பரிசோதனைகள் செய்தோம். பாதிக்கப்பட்ட சிறுமியைத் தவிர வேறு யாருக்கும் நிமோனியா பாதிப்பு இல்லை" என்று தெரிவித்தார்.