நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் கட்சி என்றும், ராகுல் காந்திதான் இதற்கு காரணம் என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வு வருவதற்கு முன்பு ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் படிப்பது மிகவும் கடினமாக இருந்ததாகக் குறிப்பிட்டார். தற்போது டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மாணவர்கள் அல்ல, அவர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என அவர் கூறினார்.
முக்கியமான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது இதுபோன்று குழப்பத்தை ஏற்படுத்துவது காங்கிரஸ் கட்சியின் திட்டமிட்ட சதி என்றும், இது தேசத்துரோகம் என்றும் நயினார் நாகேந்திரன் விமர்சித்தார். போராட்டங்களைத் தூண்டிவிட்ட ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி இவ்வளவு கோழைத்தனமாக செயல்படும் என்று தான் நினைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள் நீட் தேர்வை எழுதி வருகின்றனர். ஆனாலும், இன்னும் வேண்டாம் என்று கூறுவது எந்த வகையில் நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் பாலஸ்தீன நாட்டிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்றும், ராகுல் காந்திதான் இதற்குப் பின்னணியில் இருந்து செயல்படுவதாகவும் நயினார் நாகேந்திரன் கூறினார்.
இதற்கிடையில், பிரதமர் மோடியை சமூக வலைதளங்களில் இழிவுபடுத்தி பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் முதல்வரைப் பேசியதற்காக அதிகாலையிலேயே கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய நயினார் நாகேந்திரன், பிரதமர் மோடியை தவறாக சித்தரித்தவர் மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
