தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் மற்றும் சட்டவிரோத மது விற்பனையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் கார்த்திகா மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துணை ஆணையர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். குறிப்பாக, பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள் மற்றும் போக்குவரத்து முனையங்கள் அருகே தொடர் சோதனைகள் நடத்தி, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மது விற்பனையை கண்டறிய வேண்டும்.
இந்த நடவடிக்கைகளில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உதவியுடன் ரகசிய தகவல் வலைப்பின்னலை உருவாக்கி, கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விற்பனை பகுதிகளை கண்டறிந்து அதிரடி சோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் தயாரித்தல், கடத்துதல் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்காக காவல் துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு, டாஸ்மாக், வனத்துறை மற்றும் ரயில்வே காவல் துறைகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், டாஸ்மாக் கடைகள் மற்றும் மனமகிழ் மன்றங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களின் வேலை நேரம் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யக்கூடாது, 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. வெளி மாநில மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராய விநியோகத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மது மற்றும் போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இந்த உத்தரவுகளை முறையாக பின்பற்றாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையர் கார்த்திகா தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த கடுமையான நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது.