தென்மேற்கு பருவமழை வருகிற 16 ஆம் தேதி தெற்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அந்தமான், நிகோபார் தீவுகளில் துவங்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக, வடக்கு தமிழகம், ராயலசீமா மற்றும் வடக்கு உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நீண்டு காணப்படுகிறது.
இன்று (ஜூன் 15) தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கோவை மலைப்பகுதிகள், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தேனி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (ஜூன் 16) முதல் வரும் 20 ஆம் தேதி வரை, தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை தொடரும். கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.