லக்னோ பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பி.எஸ்.சி மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் அளித்த புகாரில், பேராசிரியர் பரம்ஜீத் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியிடம் அவர் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ பதிவு இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது.
அந்த ஆடியோ பதிவில், பேராசிரியர் மாணவியிடம், 'டார்லிங், உனக்காக இரண்டு தேர்வு வினாத்தாள்களை நான் தயார் செய்துள்ளேன். தேர்வுக்கு முன்பு எனது வீட்டிற்கு வந்தால் அதைத் தருகிறேன், எப்போது வருவாய்?' என்று பேசியுள்ளார். ஆனால், மாணவி 'நான் பாடத்திட்டங்கள் முழுவதையும் படித்துவிட்டேன், எனக்கு வினாத்தாள் தேவையில்லை' என்று திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பேராசிரியர் பரம்ஜீத் சிங் மாணவியை பலமுறை தனது வீட்டிற்கு வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். தான் விடுப்பில் இருந்தபோது கூட, பேராசிரியர் தொடர்ந்து தொலைபேசியில் அழைத்து, கல்லூரிக்கு வருமாறு வற்புறுத்தி தனக்குக் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியதாக மாணவி பல்கலைக்கழக அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த ஆடியோ பதிவு வெளியானதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் பேராசிரியரை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. பல்கலைக்கழக அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் FIR பதிவு செய்த காவல்துறையினர், பேராசிரியரை கைது செய்துள்ளனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.