கோவை மாநகரில் பரபரப்பு! ரூ.200 கள்ளநோட்டுகளை அச்சடித்து வந்த 3 பேர் தனிப்படை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கள்ளநோட்டுகள் மட்டுமின்றி, போதை மாத்திரைகள் மற்றும் மெத்தம்பெட்டமைன் போன்ற உயர்ரக போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சதாம் ஹுசைன், கார்மல் நகரை சேர்ந்த பைசல், மற்றும் கரும்புக் கடை அண்ணா காலனியை சேர்ந்த பாரூக், கரும்புக் கடையை சேர்ந்த காஜாமைதீன் என்ற ஹக்கிம் ஆகியோர் நண்பர்களாக இருந்துள்ளனர். இவர்களது வீட்டில் போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்படுவதாகவும் கோவை மாநகர தெற்கு துணை கமிஷனர் கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, துணை கமிஷனரின் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் சதாம் ஹுசைனின் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையின் போது, அங்கு ரூ.200 மதிப்புள்ள 184 கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.36,800 ஆகும். மேலும், போதை மாத்திரைகள் மற்றும் மெத்தம்பெட்டமைன் என்ற உயர்ரக போதைப்பொருளும் சிக்கியது. இவை அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரமும் கைப்பற்றப்பட்டது.
சதாம் ஹுசைன், பைசல், காஜாமைதீன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதானவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம் எப்படி கிடைத்தது, யார் வாங்கி கொடுத்தார்கள் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.