நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலில், ராஜஸ்தானில் மற்றொரு மாணவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இரண்டு மாணவர்கள் இதே காரணத்தால் உயிரிழந்த நிலையில், இந்த துயரச் சம்பவம் மாநிலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிகார் நகரில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனத்தில் மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்த பிரதீப் மேக்வால் என்ற மாணவரே உயிரிழந்தவர். அவரது குடும்பத்தினர் அளித்த தகவலின்படி, நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட செய்தி கேட்டு பிரதீப் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், தனது சகோதரியின் துப்பட்டாவைப் பயன்படுத்தி மின்விசிறியில் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உயிரிழந்த மாணவரின் தந்தை கூறுகையில், 'பிரதீப் தேர்வு நன்றாக எழுதியதாகவும், 650 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று நிச்சயம் மருத்துவம் படிப்பேன் என்றும் நம்பிக்கையுடன் கூறியிருந்தான்' என்று கண்ணீருடன் தெரிவித்தார். மகனின் திடீர் மரணம் அவரை நிலைகுலையச் செய்துள்ளது.
இந்த துயரச் சம்பவத்திற்கு ராஜஸ்தானின் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் இரங்கல் தெரிவித்துள்ளார். 'மாணவர் பிரதீப்பின் தற்கொலை மிகுந்த வேதனை அளிக்கிறது. கோவா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களிலும் மாணவர்கள் இதேபோல் தற்கொலை செய்து கொண்டதாக வரும் செய்திகள் மனதை மிகவும் கலக்கமடையச் செய்கின்றன' என்று அவர் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். நீட் தேர்வு குறித்த சர்ச்சை மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தி வருவதாக பரவலாகக் கூறப்படுகிறது.