இந்தியாவில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்கவும், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்கவும் பிரதமர் மோடி சமீபத்தில் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பெட்ரோல், டீசல் மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பைப் பாதுகாக்க உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தச் சூழலில், வெளிநாட்டுப் பயணங்களுக்கு கூடுதல் வரி அல்லது கட்டணம் விதிக்கும் திட்டம் குறித்து அரசு பரிசீலித்து வருவதாக சில தகவல்கள் பரவின. ஆனால், பிரதமர் மோடி இந்த வதந்திகளுக்கு திட்டவட்டமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) வலைதளப் பக்கத்தில் இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
"மக்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு வரி விதிக்கப் போவதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது. இதில் துளியளவும் உண்மையில்லை. வெளிநாட்டுப் பயணத்தின் மீது அத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை," என்று பிரதமர் மோடி தனது பதிவில் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
மேலும், "எங்கள் மக்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் வாழ்வதை எளிதாக்குதல் ஆகியவற்றை மேம்படுத்துவதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசின் கொள்கை மக்களுக்குச் சாதகமாகவே இருக்கும் என்பதை இதன் மூலம் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.