ஆந்திர துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், நடிகர் விஜய்யுடன் தன்னை ஒப்பிட்டு பேசுவது குறித்து மன வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக கட்சி, கட்சி தொடங்கி வெறும் 2 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வெற்றி, ஆந்திராவிலும் இதே போன்ற ஒரு சூழலை எதிர்பார்க்கும் ரசிகர்களிடையே, பவன் கல்யாண் மீதும் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
மங்களகிரியில் உள்ள ஜன சேனா கட்சித் தலைமையகத்தில் தொண்டர்களிடையே உரையாற்றிய பவன் கல்யாண், 'தமிழக தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து, குறிப்பாக விஜய் முதலமைச்சரான பிறகு, மக்கள் என் மீது கடுமையான அழுத்தத்தை கொடுக்கத் தொடங்கியுள்ளனர். அண்டை மாநிலத்தில் ஒரு நடிகர் கட்சி தொடங்கி, தனித்து போட்டியிட்டு முதலமைச்சராகிவிட்டார். நீங்களும் ஆந்திராவில் தனித்து போட்டியிட்டு முதல்வராகியிருக்க வேண்டும் என பலர் எனக்கு குறுஞ்செய்தி அனுப்புகின்றனர்' என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒரு தெலுங்கு பழமொழியை மேற்கோள் காட்டி, 'இது எப்படி இருக்கிறது என்றால், அடுத்த வீட்டுத் திருமணத்திற்காக, அந்த வீட்டுக்கு சம்பந்தமே இல்லாத சிறுவர், சிறுமிகள் உற்சாகமடைவதை போல இருக்கிறது. ஆந்திரப் பிரதேசத்தின் அரசியல் சூழல் முற்றிலும் வேறுபட்டது. கடந்த 2019 தேர்தலில் நான் தனித்துப் போட்டியிட்டபோது, இதே மக்கள் என்ன செய்தார்கள்? அமைச்சர்கள் உட்பட யாரும் கூட என்னுடன் நிற்கவில்லை. அப்போதைய சூழலும், இன்றைய தமிழக சூழலும் ஒன்றல்ல' என்று விளக்கினார்.
இதன் மூலம், நடிகர்கள் அரசியலுக்கு வருவது எளிது என்றாலும், வெற்றி பெறுவது என்பது அந்தந்த மாநிலத்தின் அரசியல் சூழல், மக்களின் மனநிலை மற்றும் கட்சியின் உழைப்பு ஆகியவற்றைப் பொறுத்தது என்பதை பவன் கல்யாண் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார். விஜய்யின் வெற்றி ஒருபுறம் இருக்க, ஆந்திர அரசியலில் தனது கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து பவன் கல்யாண் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.